2019 உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதியுடன் வெளியேறிய நிலையில், கேப்டனாக விராட் கோலி தொடர வேண்டுமா? என்று சுனில் கவாஸ்கர் கடுமையாகச் சாடியுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகையில்,
தேர்வுக்குழுக் கூட்டம் நடத்தாமல் மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனக்கு தெரிந்து உலகக் கோப்பை வரை தான் விராட் கோலி இந்திய கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து விராட் கோலி கேப்டனாக தொடர வேண்டுமா? என்பது குறித்து தேர்வுக்குழுவினரால் 5 நிமிடங்கள் செலவிட்டு கூட ஆலோசிக்க முடியாதா?
இதனால் விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக தொடர வேண்டும் என்ற தேர்வுக்குழு விரும்புவது தெளிவாகிறது. தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை என்று காரணத்துக்காக அணியில் இருந்து நீக்கப்படும் போது, இறுதிப் போட்டி வரை இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்துவார் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விராட் கோலி, இனியும் கேப்டன் பதவியில் தொடர வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, 2019 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து கேப்டனிடம் கேள்வி கேட்க வேண்டிய அவசியமில்லை. அணி மேலாளர் சமர்ப்பித்த ஆவணங்கள் போதுமானது என சிஓஏ குழு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதுபோன்று தனித்தனி கேப்டன் முறை ஏற்படுத்தப்பட்டால் தான் 2023 உலகக் கோப்பைக்கு இந்திய அணியை தயார் செய்ய முடியும் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே ரோஹித் ஷர்மாவுக்கும் தனக்கு கருத்து வேறுபாடு கிடையாது என்று விராட் கோலி தெரிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது.