லண்டன்: ஆப்கனுடனான போட்டியில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இந்திய அணித்தலைவர் விராட் கோலிக்கு ஆட்ட ஊதியத்தில் 25% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தின் சவுதம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் சனிக்கிழமையன்று நடந்த 28வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்கம் முதலே தடுமாறிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. 2010ம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் முதலில் பேட் செய்து 50 ஓவர்களை முழுமையாக ஆடி முடித்த ஆட்டங்களில் இந்திய அணியின் குறைந்த ஸ்கோர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த போட்டியின் போது ஆப்கானிஸ்தான் அணி வீரர் ஹஸ்ரத்துல்லா ஜஜாய் பேட்டிங் செய்த பொழுது, முகமது சமி வீசிய பந்தில், டி.ஆர்.எஸ். முறையில் எல்.பி.டபிள்யூ. அவுட் கேட்டு விராட் கோலி நடுவரிடம் முறையிட்டார். ஆனால் அந்த பந்து ஸ்டம்பில் படாமல் மயிரிழையில் விலகிச் சென்றுள்ளது டி.ஆர்.எஸ். முறையில் தெரிந்தது.
ஆனால் பின்னர் நடுவருடன் இதுகுறித்து உரையாடிக் கொண்டிருந்த கோலி பின்னர் இரு கைகளையும் கூப்பியபடி நடுவரிடம் மன்னிப்பு கேட்டு உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இந்திய அணித்தலைவர் விராட் கோலிக்கு ஆட்ட ஊதியத்தில் 25% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள செய்திக்குகுறிப்பில் போட்டிக்கான ஐ.சி.சி.யின் நடத்தை விதி 1 மற்றும் 2.1 ஐ மீறும் செயலில் கோலி ஈடுபட்டு உள்ளார். எனவே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், விதிமீறலில் ஈடுபட்ட விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 25% அபராதம் விதித்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.