

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸஃபார் சர்ஃபராஸ் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 10,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இதுவரை கரோனா வைரஸால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள்.
1988-ல் தொழில்முறை கிரிக்கெட்டில் அறிமுகமான பாகிஸ்தான் வீரர் ஸஃபார் சர்ஃபராஸ், கரோனா வைரஸ் தொற்றால் பெஷாவரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 50 வயது சர்ஃபராஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர், கரோனா வைரஸால் உயிரிழந்த முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்.
இடக்கை பேட்மேனான சர்ஃபராஸ், 15 முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடி 616 ரன்கள் எடுத்துள்ளார். 6 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். 1994-ல் ஓய்வு பெற்றார். இதன்பிறகு பயிற்சியாளராகப் பணியாற்றினார். இவருடைய சகோதரர் அக்தர் சர்ஃபராஸ் சமீபத்தில் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். அவர் பாகிஸ்தான் அணிக்காக 4 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.