3-வது டி20: கோலியின் அதிரடி ஆட்டம் வீண்; ஆஸி. அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

இந்திய அணி 2-1 என டி20 தொடரைக் கைப்பற்றியது...
விராட் கோலி
விராட் கோலி

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தை 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது ஆஸ்திரேலியா. இதனால் டி20 தொடரை 2-1 என இந்திய அணி வென்றுள்ளது.

காயம் காரணமாக 2-வது டி20 ஆட்டத்தில் இடம்பெறாத ஆரோன் ஃபிஞ்ச், இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் தலைமை தாங்குகினார். ஆஸி. அணியில் ஸ்டாய்னிஸ் இடம்பெறவில்லை. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் இல்லை. மயங்க் அகர்வால், ஷமி, பும்ரா ஆகியோருக்கு டெஸ்ட் தொடருக்காக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

2-வது ஓவரில் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச்சை டக் அவுட் ஆக்கினார் வாஷிங்டன் சுந்தர். இதன்பிறகு ஸ்மித்தும் மேத்யூ வேடும் அருமையான கூட்டணி அமைத்தார்கள். ஸ்மித் 24 பந்துகளில் சுந்தர் பந்துவீச்சில் போல்ட் ஆனார். அடுத்ததாக வேட் - மேக்ஸ்வெல் கூட்டணி அதிரடியாக விளையாடியது.

11-வது ஓவரில் நடராஜன் வீசிய பந்து, மேத்யூ வேட்-ன் காலில் பட்டது. இதனால் எல்பிடபிள்யூ கோரினார் நடராஜன். ஆனால் கள நடுவர் அவுட் தர மறுத்துவிட்டார். 

இதன்பிறகு மைதானத்தில் உள்ள பெரிய திரையில் இது காண்பிக்கப்பட்டது. அப்போது அவுட் போலத் தெரிந்ததால் உடனே டிஆர்எஸ் கோரினார் கோலி. இதை ஏற்றுக்கொண்ட நடுவரும் டிஆர்எஸ்ஸுக்கு சைகை காண்பித்தார். ஆனால் மேத்யூ வேட் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். பெரிய திரையில் காண்பித்த பிறகு முறையீடு செய்யலாமா எனக் கேட்டார். இதனால் நடுவர் தனது முடிவை மாற்றிக்கொண்டார். டிஆர்எஸ் கிடையாது என அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கோலி, நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தார். எனினும் நடுவர் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. 

ஆனால் ரீப்ளேயில் காண்பிக்கப்பட்டபோது, மேத்யூ வேட் எல்பிடபிள்யூ ஆகியிருந்தார். இதனால் விக்கெட் எடுக்கும் வாய்ப்பைப் பறிகொடுத்தார் நடராஜன். 

53 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் எடுத்து தாக்குர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் வேட். கடைசி ஓவர் வரை விளையாடிய மேக்ஸ்வெல், 36 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்து நடராஜன் பந்துவீச்சில் போல்ட் ஆனார். ஷார்ட் 7 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. 

இந்திய அணியின் இன்னிங்ஸில் முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் மேக்ஸ்வெல்லின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ராகுல். இதன்பிறகு ஷிகர் தவனும் விராட் கோலியும் நல்ல கூட்டணி அமைத்தார்கள். 21 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த ஷிகர் தவன், ஸ்வெப்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கோலி - சஞ்சு சாம்சன் கூட்டணி நிதானமாக ரன்கள் எடுத்து மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். இன்று அதிக ரன்கள் எடுத்து தனது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய நிலைமையில் இருந்த சஞ்சு சாம்சன், 10 ரன்களில் ஸ்வெப்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ஸ்ரேயஸ் ஐயர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்ததால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இந்திய அணியின் வெற்றிக்கு உத்தரவாதம் தருவது போல சிறப்பாக விளையாடினார் விராட் கோலி. 41 பந்துகளில் அரை சதமெடுத்தார். இது விராட் கோலியின் 25-வது டி20 அரை சதமாகும். இந்த வருடம் எடுக்கும் முதல் டி20 அரை சதம் இது. அரை சதமெடுத்த பிறகு கோலி அதிரடியாக விளையாடினார். பாண்டியாவும் 2 சிக்ஸர்கள் அடித்தார்.

ஆனால் கடைசிக்கட்டத்தில் கூடுதல் அழுத்தத்துக்கு ஆளான இந்திய வீரர்கள் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தார்கள். பாண்டியா, ஸாம்பா பந்துவீச்சில் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி, 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 85 ரன்களில் டை பந்துவீச்சில் ஆட்டமிழந்ததால் வெற்றி வாய்ப்பை நெருங்கியது ஆஸ்திரேலிய அணி. ஷர்துல் தாக்குர் 2 சிக்ஸர்களுடன் 7 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. இதனால் 3-வது டி20 ஆட்டத்தை 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா. ஸ்வெப்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் டி20 ஆட்டத்தை 11 ரன்கள் வித்தியாசத்திலும் 2-வது டி20 ஆட்டத்தை 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வென்று 2-1 என டி20 தொடரைக் கைப்பற்றியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com