16 வருடங்கள் கழித்து பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இங்கிலாந்து அணி!

பாகிஸ்தானில் இரு டி20 ஆட்டங்களில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது.
16 வருடங்கள் கழித்து பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இங்கிலாந்து அணி!

அடுத்த வருட அக்டோபர் மாதத்தில் பாகிஸ்தானில் இரு டி20 ஆட்டங்களில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது.

2009-ல் பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான லாகூர் டெஸ்ட், தீவிரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்டது. மைதானத்துக்கு இலங்கை அணி வீரர்களை அழைத்து வந்த பேருந்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் எட்டு பேர் கொல்லப்பட்டார்கள். சில வீரர்களும் நிர்வாகிகளும் காயமடைந்தார்கள். இதையடுத்து பாகிஸ்தானில் சர்வதேச ஆட்டங்கள் நடைபெறுவது தடைபட்டது. 2017 முதல் சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்கள் பாகிஸ்தானில் மீண்டும் நடைபெற்று வருகின்றன. அந்த வருடம் லாகூரில் இலங்கை அணி ஒரு டி20 ஆட்டத்தில் விளையாடியது. 10 வருடங்களுக்குப் பிறகு கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தானில் ராவல்பிண்டியில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தான் விளையாடியது. 

இந்நிலையில் 16 வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணி, பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. ஜனவரியில் டி20 தொடருக்காக பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் செல்லவிருந்த நிலையில் அத்தொடர் பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து டி20 உலகக்கோப்பையை முன்னிட்டு 2021 அக்டோபர் மாதத்தில் பாகிஸ்தானில் இரு டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது இங்கிலாந்து அணி. அக்டோபர் 14, 15 தேதிகளில் டி20 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர் 12 அன்று பாகிஸ்தானுக்கு வரும் இங்கிலாந்து அணி, அக்டோபர் 16 அன்று டி20 உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்குச் செல்லவுள்ளது. 

கடைசியாக, 2005-ல் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியது. 2012, 2015 ஆண்டுகளில் இரு அணிகளுக்கு இடையிலான தொடர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com