இந்திய வீரர்கள் மயங்க் அகர்வால் மற்றும் ஷுப்மன் கில் காயம் காரணமாக பீல்டிங்கில் ஈடுபட மாட்டார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் பேட்டிங் செய்த இந்தியா 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய நியூசிலாந்து வெறும் 62 ரன்களுக்கு சுருண்டது.
தொடர்ந்து, 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம், நியூசிலாந்து வெற்றிக்கு 540 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையும் படிக்க | வலுவான நிலையில் இந்தியா...மோசமான தோல்வியை தவிர்க்குமா நியூசிலாந்து?
இந்த நிலையில் இந்திய வீரர்கள் மயங்க் அகர்வால் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் காயம் காரணமாக பீல்டிங் செய்ய மாட்டார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 2-வது இன்னிங்ஸ் பேட்டிங்கின்போது அகர்வாலின் கையில் காயம் ஏற்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் பீல்டிங் செய்வதைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
கில்லுக்கு நேற்று (சனிக்கிழமை) பீல்டிங்கின்போது விரலில் காயம் ஏற்பட்டதால், இன்றும் பீல்டிங் செய்ய மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2-வது இன்னிங்ஸ் பேட்டிங்கிலும் அவர் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்காமல், 3-வது வரிசை பேட்ஸ்மேனாகவே களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.