சிட்னி டெஸ்ட் தேநீர் இடைவேளை: அதிரடியாக விளையாடி 97 ரன்கள் எடுத்த ரிஷப் பந்த், இந்தியா 280/5
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் கடைசி நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்துள்ளது.
சிட்னியில் கடந்த 7-ம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் குவித்தது. அணியின் தரப்பில் ஸ்டீவ் ஸ்மித் 131 ரன்கள் விளாச, இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.
பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, 244 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில், சேதேஷ்வா் புஜாரா மட்டும் தலா 50 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலிய அணியில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.
முதல் இன்னிங்ஸில் 94 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா 2-ஆவது இன்னிங்ஸில் 87 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் சோ்த்து டிக்ளோ் செய்தது. இந்திய அணிக்கு 407 வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 4-ம் நாள் முடிவில் இந்தியா 34 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்தது. புஜாரா 9 , ரஹானே 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இந்நிலையில் 5-ம் நாளில் இந்திய அணி வெற்றிக்காகக் கடுமையாகப் போராடி வருகிறது. தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 96 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 4 ரன்களில் வீழ்ந்த பிறகு களமிறங்கிய ரிஷப் பந்த் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அவர் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய அணிக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார். 118 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் எடுத்து அனைவருடைய பாராட்டையும் பெற்றார். 205 பந்துகள் எதிர்கொண்டு 12 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் புஜாரா.
இந்திய அணி வெற்றி பெற 127 ரன்கள் தேவை. 5 விக்கெட்டுகள் மீதமுள்ளன. விஹாரி 4, அஸ்வின் 7 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
5-வது நாளின் கடைசிப் பகுதியில் வெற்றி, தோல்வி, டிரா என மூன்று முடிவுகளும் சாத்தியம் என்பதால் பரபரப்பான கட்டத்தை நெருங்கியது சிட்னி டெஸ்ட்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

