உடற்தகுதித் தேர்வில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி இடம்பெறுவது சந்தேகமாகியுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 3-1 என வென்றது இந்திய அணி. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஆமதாபாத்திலும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவிலும் நடைபெறவுள்ளன. டி20 தொடர் மார்ச் 12 முதல் தொடங்குகிறது.
இந்திய டி20 அணிக்குத் தேர்வான வருண் சக்ரவர்த்தி, பிசிசிஐ நடத்திய உடற்தகுதித் தேர்வில் தோல்வியடைந்தார். இதன்பிறகு மற்றொரு தேர்வும் அவருக்கு வைக்கப்பட்டது. இதிலும் வருண் தேர்ச்சி பெறவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் டி20 தொடரில் வருண் இடம்பெறுவது சந்தேகம் எனத் தெரிகிறது. மேலும் வருணுக்குப் பதிலாக வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராகத் தேர்வாகியுள்ள ராகுல் சஹார், இந்திய அணிக்குத் தேர்வாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 தொடருக்கு முதலில் தேர்வான வருண் சக்ரவர்த்தி, காயம் காரணமாக விலகினார். பிறகு இங்கிலாந்து டி20 தொடருக்கும் தேர்வு செய்யப்பட்டார். தற்போது உடற்தகுதித் தேர்வில் தோல்வியடைந்ததால் தனக்குக் கிடைத்த 2-வது வாய்ப்பையும் அவரால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.