ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வீழ்த்தி வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் கோல்ட்கோஸ்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட் செய்த இந்திய மகளிர் 145 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 377 ரன்கள் குவித்து சாதனை படைத்தது.
இதையும் படிக்க | பகலிரவு டெஸ்ட்: 377/8 ரன்கள் எடுத்து சாதித்த இந்திய மகளிர் அணி
இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய தொடக்க வீராங்கனைகளாக அலிசா ஹீலி மற்றும் பெத் மூனி களமிறங்கினர். மூனி 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தபோது ஜுலான் கோஸ்வாமி அவரை போல்டாக்கி அசத்தினார். இதன்பிறகு, ஹீலியுடன் இணைந்து கேப்டன் மெக் லேனிங் சிறிய பாட்னர்ஷிப்பை அமைத்தார். 29 ரன்கள் எடுத்த ஹீலியையும் கோஸ்வாமி வீழ்த்தினார்.
அவரைத் தொடர்ந்து மெக் லேனிங்கும் 38 ரன்களுக்கு பூஜா வஸ்த்ராகர் பந்தில் ஆட்டமிழந்தார். இதேபோல தஹிலா மெக்ராத்தும் 28 ரன்கள் எடுத்து பூஜா வஸ்த்ராகரிடம் வீழ்ந்தார்.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்த ஆஸ்திரேலியா 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி இன்னும் 234 ரன்கள் பின்தங்கி உள்ளது.