ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா மகளிா் அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் கோல்ட்கோஸ்டில் நடைபெற்று வருகிறது. இந்திய மகளிர் அணி முதல்முறையாகப் பகலிரவு டெஸ்டில் பங்கேற்கிறது. மகளிர் கிரிக்கெட்டில் இது 2-வது பகலிரவு டெஸ்ட்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் மேக்னா சிங், யாஸ்திகா பாட்டியா டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆகியுள்ளார்கள்.
2-ம் நாள் முடிவில் 101.5 ஓவர்களில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்தது. மந்தனா 127 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் இந்திய மகளிர் அணி இன்று 145 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்துள்ளது. தீப்தி சர்மா 167 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார்.
இந்த ஸ்கோரில் சில சாதனைகளையும் இந்திய மகளிர் அணி நிகழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் விளையாடிய வெளிநாட்டு அணிகளில் இதுவே அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு 1972-ல் நியூசிலாந்து அணி 335 ரன்கள் எடுத்தது. மேலும் ஆஸ்திரேலியாவில் தனது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரையும் இந்திய அணி எடுத்துள்ளது. 1984-க்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் தனது இன்னிங்ஸை டிக்ளேர் செய்த முதல் வெளிநாட்டு அணி என்கிற பெருமையும் இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.