யு-19 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட நிவேதன் ராதாகிருஷ்ணன் இடம்பிடித்துள்ளார்.
ஜனவரி 14 முதல் மேற்கிந்தியத் தீவுகளில் யு-19 உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் 19 வயது நிவேதன் ராதாகிருஷ்ணன் என்கிற தமிழர் இடம்பிடித்துள்ளார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் இருமுறை பங்கேற்றுள்ள நிவேதன், ஐபிஎல் 2021 போட்டியில் தில்லி அணியில் இடம்பெற்றார், வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராக. சுழற்பந்து வீச்சாளரான நிவேதன், இரு கைகளிலும் பந்துவீசும் திறமை கொண்டவர்.
சென்னையைச் சேர்ந்த நிவேதன், பத்து வயது முதல் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா அணிக்காக விளையாடி வருகிறார். ஆஸ்திரேலிய அணிக்காக யு-16 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இப்போது ஆஸி. அணியின் உலகக் கோப்பை அணியிலும் இடம்பெற்றுள்ளார்.