அஸ்வின் 6 விக்கெட்டுகள்: இந்தியாவுக்கு 420 ரன்கள் இலக்கு

​இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் சுழலில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 178 ரன்களுக்கு சுருண்டது.
அஸ்வின் 6 விக்கெட்டுகள்: இந்தியாவுக்கு 420 ரன்கள் இலக்கு


இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் சுழலில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 178 ரன்களுக்கு சுருண்டது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்திருந்தது. 

வாஷிங்டன் சுந்தர் 33 ரன்களிலும், அஸ்வின் 8 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. அஸ்வின் துரிதமாக ரன் சேர்க்கத் தொடங்கினார். வாஷிங்டனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் மற்றொரு அரைசதத்தைப் பதிவு செய்தார்.

ஆனால், அஸ்வினால் பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை. 31 ரன்கள் எடுத்த அவர் ஜேக் லீச் சுழலில் சிக்கினார். அடுத்து களமிறங்கிய ஷபாஸ் நதீம் ரன் ஏதும் எடுக்காமலும், இஷாந்த் 4 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகள் சரிந்ததால் வாஷிங்டன் துரிதமாக ரன் சேர்க்கத் தொடங்கினார். எனினும், பூம்ரா கடைசி விக்கெட்டாக ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இதன்மூலம், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வாஷிங்டன் 85 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து தரப்பில் டோம் பெஸ் 4 விக்கெட்டுகளையும், ஜோப்ரா ஆர்ச்சர், ஜேக் லீச் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

241 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தபோதிலும் இந்தியாவை பாலோ ஆன் செய்ய இங்கிலாந்து அழைக்கவில்லை.

இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸ் பேட்டிங்கைத் தொடங்கியது. அஸ்வின் வீசிய முதல் பந்திலேயே ரோரி பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். எனினும் பெரிய முன்னிலை இருந்ததால் இங்கிலாந்து வீரர்கள் துரிதமாக ரன் சேர்க்க முயற்சித்து அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.

அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 40 ரன்கள் சேர்த்தார். அந்த அணி 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணித் தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளையும், நதீம் 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா மற்றும் ஜாஸ்பிரீத் பூம்ரா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதன்மூலம், இந்திய அணியின் வெற்றிக்கு 420 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com