பிறந்தநாளில் மாயாஜாலம் காட்டிய ஹசரங்கா: 81 ரன்களுக்கு கட்டுப்பட்டது இந்தியா
By DIN | Published On : 29th July 2021 09:49 PM | Last Updated : 29th July 2021 09:53 PM | அ+அ அ- |

இலங்கையுடனான 3-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் கொழும்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷிகர் தவான் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
தவான் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, கடந்தாட்டத்தைப்போல சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். ரமேஷ் மெண்டிஸ் சுழலில் தேவ்தத் படிக்கல் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதையும் படிக்க | இலங்கையின் பெரிய மைதானம் இந்திய பேட்ஸ்மேன்களுக்குச் சவாலாக உள்ளது: பந்துவீச்சுப் பயிற்சியாளர்
அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் வனிந்து ஹசரங்கா சுழலில் வீழ்ந்தார். அதே ஓவரில் ருதுராஜ் கெய்க்வாடும் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு, நிதிஷ் ராணாவும் 6 ரன்களுக்கு தசுன் ஷனாகாவின் அற்புதமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார்.
நீண்ட நேரம் களத்திலிருந்த புவனேஷ்வர் குமார் 32 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார். அதன்பிறகும் இந்திய வீரர்கள் திணற, குல்தீப் யாதவ் மட்டும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 23 ரன்கள் எடுத்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கை தரப்பில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஹசரங்கா 4 விக்கெட்டுகளையும், ஷனாகா 2 விக்கெட்டுகளையும், மெண்டிஸ் மற்றும் சமீரா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.