இந்திய முன்னாள் வீராங்கனைக்கு விராட் கோலி நிதியுதவி
By DIN | Published On : 19th May 2021 04:43 PM | Last Updated : 19th May 2021 04:43 PM | அ+அ அ- |

இந்திய முன்னாள் வீராங்கனை ஸ்ரவந்தி நாயுடுவின் பெற்றோரின் மருத்துவ சிகிச்சைக்காக இந்திய அணி கேப்டன் விராட் கோலி நிதியுதவி செய்துள்ளார்.
இந்திய மகளிர் அணிக்காக ஒரு டெஸ்ட், நான்கு ஒருநாள், ஆறு டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் ஹைதராபாத்தைச் சேர்ந்த 34 வயது ஸ்ரவந்தி நாயுடு. 2005-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான ஸ்ரவந்தி, கடைசியாக 2014-ல் விளையாடினார்.
இந்நிலையில் ஸ்ரவந்தியின் பெற்றோர் சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த தனது பெற்றோரின் சிகிச்சைக்காக ரூ. 16 வரை செலவு செய்துள்ளார் ஸ்ரவந்தி. மேலும் செலவுகள் அதிகமானதால் அவர் சிரமத்துக்கு ஆளானார்.
அவருடைய நிலைமையைக் கண்ட இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், ஸ்ரவந்திக்கு நிதியுதவி செய்யுமாறு சமூகவலைத்தளம் வழியாக கோரிக்கை விடுத்தார். தன்னுடைய பதிவில் விராட் கோலி, விஹாரி ஆகிய இரு இந்திய வீரர்களையும் டேக் செய்தார்.
இதையடுத்து ஸ்ரவந்தியின் பெற்றோரின் மருத்துவச் சிகிச்சைக்காக இந்திய அணி கேப்டன் விராட் கோலி ரூ. 6.77 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். ஸ்ரவந்திக்கு உதவுவதாக விஹாரியும் வாக்குறுதி அளித்துள்ளார். ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம், ஸ்ரவந்திக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி செய்வதாகக் கூறியுள்ளது.