
ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காதபோது வேதனையடைந்ததாக டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தொடர் நாயகன் விருது வென்ற டேவிட் வார்னர் கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது. டேவிட் வார்னர் 38 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்தார். தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றினார்.
2021 ஐபிஎல் போட்டியில் 8 ஆட்டங்களில் 195 ரன்கள் மட்டுமே எடுத்தார் டேவிட் வார்னர். ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2021 போட்டி நடைபெற்றபோது கேப்டன் பதவியைப் பறிகொடுத்ததோடு அணியிலிருந்தும் நீக்கப்பட்டார். டி20 உலகக் கோப்பைப் பயிற்சி ஆட்டங்களில் 0,1 என மோசமாக விளையாடினார். இதனால் அவருடைய பேட்டிங் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. எனினும் டி20 உலகக் கோப்பைப் போட்டியின் முக்கியமான ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி, அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 2-ம் இடம் பிடித்தார்.
இந்நிலையில் ஒரு பேட்டியில், ஐபிஎல் 2021 அனுபவம் பற்றி வார்னர் கூறியதாவது:
ஐபிஎல் அணியில் எனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காததற்கு என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கட்டும், எப்போதும் போல பயிற்சியில் தீவிரமாகவே ஈடுபட்டேன். ஒருநாள் கூட தவறவில்லை. வலைப்பயிற்சியின்போது நன்றாக விளையாடினேன். எப்போது வேண்டுமானாலும் நான் வழக்கம்போல நன்றாக விளையாட ஆரம்பித்திருக்கலாம். கேப்டன் பதவியைப் பறித்து அணியிலிருந்தும் நீக்கியதால் வேதனையடைந்தேன். எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரியும். விளையாட்டில் உண்மையாக இருந்தால், தொடர்ந்து உழைத்தால் உங்களுக்கு 2-வது வாய்ப்பு கிடைக்கும். தொடர்ந்து உழைத்ததால் பலன் கிடைத்தது. இதனால் மகிழ்ச்சியாக உள்ளேன். எனக்கு எவ்விதப் புகாரும் இல்லை. இந்திய ரசிகர்கள் எனக்கு எப்போதும் ஆதரவளித்தார்கள். அவர்களுக்காகத்தான் நாம் விளையாடுகிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.