
புது தில்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா உள்பட 11 பேருக்கு விளையாட்டுத் துறையில் உயரியதான கேல் ரத்னா விருது வழங்குவதற்கு தேர்வுக் குழு பரிந்துரைத்துள்ளது.
அவர் தவிர, அதே ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மல்யுத்த வீரர் ரவி தாஹியா, வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன், இந்திய ஆடவர் ஹாக்கி அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ், கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி ஆகியோர் பெயரும் அந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெகாரா மற்றும் மணீஷ் நர்வால் (துப்பாக்கி சுடுதல்), சுமித் அன்டில் (தடகளம்), பிரமோத் பகத் மற்றும் கிருஷ்ணா நாகர் (பாட்மின்டன்) ஆகியோர் பெயரையும் தேர்வுக் குழு பரிந்துரைத்துள்ளது.
அதேபோல் அர்ஜுனா விருதுக்காக 35 பேர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவன், பாரா டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா படேல், பாரா பாட்மின்டன் வீரர் சுஹாஸ் யதிராஜ், பாரா உயரம் தாண்டுதல் வீரர் நிஷாத் குமார், மகளிர் ஹாக்கி வீராங்கனைகள் வந்தனா கட்டாரியா, மோனிகா, வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, குத்துச்சண்டை வீராங்கனை சிம்ரன்ஜீத் கெüர், மல்யுத்த வீரர் தீபக் புனியா, துப்பாக்கி சுடுதல் வீரர் அபிஷேக் வர்மா, கபடி வீரர் சந்தீப் நர்வால், டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னா உள்ளிட்டோர் அடங்குவர்.
துரோணாச்சார்யா விருதுக்காக, தடகள பயிற்சியாளர்கள் ராதாகிருஷ்ண நாயர், டி.பி. ஒüசெப், ஹாக்கி பயிற்சியாளர் சந்தீப் சங்வான் உள்ளிட்டோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
கடந்த முறை 5 பேருக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்ட நிலையில், இம்முறை 11 பேருக்கு அந்த விருது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த முறை 27 பேருக்கு அர்ஜுனா விருது பரிந்துரைக்கப்பட்ட நிலையில், இம்முறை 35 பேருக்கு அந்த விருது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.