2-1? அல்லது 2-2: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முடிவு என்ன?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விதிமுறைகளின்படி அணியில் யாருக்காவது கரோனா பாதிப்பு ஏற்பட்டால்...
2-1? அல்லது 2-2: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முடிவு என்ன?

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் ரத்தானதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதையடுத்து டெஸ்ட் தொடரின் முடிவு குறித்த குழப்பம் உருவாகியுள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. லண்டன் ஓவல் டெஸ்டை இந்திய அணி வென்று டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. 5-வது டெஸ்ட், மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது. 

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அடுத்தக்கட்டமாக இந்திய அணியின் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இதனால் இந்திய அணியின் வியாழக்கிழமை பயிற்சி ரத்தானது. அனைத்து இந்திய வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அனைவருக்கும் கரோனா இல்லை என்பது உறுதியானது.

எனினும் இன்று மைதானத்தில் களமிறங்க இந்திய வீரர்கள் தயக்கம் காட்டினார்கள். வரும் நாள்களில் கரோனா பாதிப்பு மேலும் அதிகமானால் என்ன செய்வது என அவர்கள் அச்சப்பட்டார்கள். இதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியது பிசிசிஐ. இதன் முடிவில் 5-வது டெஸ்ட் ரத்தானதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதையடுத்து டெஸ்ட் தொடரின் முடிவு குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது. 5-வது டெஸ்ட் ரத்தானதால் இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என வென்றதா அல்லது டெஸ்டில் விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்ததால் 2-2 என டெஸ்ட் தொடர் சமனாகியுள்ளதா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விதிமுறைகளின்படி அணியில் யாருக்காவது கரோனா பாதிப்பு ஏற்பட்டால் அதன் அடிப்படையில் டெஸ்டை ரத்து செய்யலாம். எனவே  5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது 4-ஆகக் குறைக்கப்பட்டு, இந்தியா 2-1 என வென்றதாக அறிவிக்கப்படலாம். ஆனால் இந்திய அணி விளையாட மறுப்பு தெரிவித்துள்ளதால் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரின் முடிவை 2-2 என அறிவிக்கவே விரும்புகிறது. எனினும் இதற்கு பிசிசிஐ சம்மதித்தால் தொடர் வெற்றியை இழப்பதோடு, டெஸ்ட் ஆட்டம் நடக்காததால் தொலைக்காட்சி ஒளிபரப்பு, மைதானம் போன்றவற்றுக்கு ஏற்பட்ட இழப்பை பிசிசிஐ வழியாக ஈடுகட்டும் சூழலும் உருவாகும். 

கரோனா பாதிப்பால் விளையாட முடியாத சூழலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டால் ஆட்ட நடுவர் கிறிஸ் பிராட், டெஸ்ட் தொடர் 2-1 என இந்தியாவுக்குச் சாதகமாக முடிந்ததாக அறிவிப்பார். ஒருவேளை இந்தியாவின் காரணங்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொள்ளாவிட்டால் ஐசிசி கமிட்டி இதுதொடர்பாக விசாரணை நடத்தி முடிவை அறிவிக்கும். தற்போதைக்கு டெஸ்ட் தொடரின் முடிவில் இந்திய அணி 26 புள்ளிகளையும் இங்கிலாந்து 14 புள்ளிகளையும் வென்றுள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com