உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்குத் தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளார்கள் இந்திய வீரர்களான சிராக் - சாத்விக் சைராஜ்.
டோக்கியோவில் நடைபெற்று வரும் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிராக் - சாத்விக் சைராஜ் ஜோடி, ஜப்பானின் யுகோ - டகுரோ ஜோடியைக் காலிறுதியில் எதிர்கொண்டது.
பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய ஜோடி, 24-22, 15-21, 21-14 என ஜப்பான் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்கள். இதன்மூலம் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் பதக்கம் பெறும் முதல் இந்திய ஜோடி என்கிற சாதனையை சிராக் - சாத்விக் சைராஜ் ஆகியோர் படைத்துள்ளார்கள். இதற்கு முன்பு 2011-ல் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் ஜுவாலா கட்டா - அஸ்வினி பொன்னப்பா ஆகிய இருவரும் பதக்கம் வென்றார்கள்.
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் வரலாற்றில் இந்தியாவின் 13-வது பதக்கத்தை சிராக் - சாத்விக் சைராஜ் ஜோடி உறுதி செய்துள்ளது. 2011 முதல் இப்போட்டியில் இந்தியா குறைந்தபட்சம் ஒரு பதக்கமாவது பெற்று வருகிறது. அரையிறுதியில் சிராக் - சாத்விக் சைராஜ் ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா - வூய் சோஹ் ஜோடியை எதிர்கொள்கிறார்கள்.