இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் தில்லியில் வருகிற டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தலைவர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நவம்பர் இறுதி வாரத்திலேயே முடிவடைந்தது.
இதையும் படிக்க: இஷான் கிஷன் அதிரடி இரட்டை சதம்: 200*
இந்த நிலையில் இன்று, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக பி.டி.உஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
58 வயதான பி.டி.உஷா பல்வேறு ஆசியப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்று குவித்துள்ளார். 1984 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தடை தாண்டுதலில் 4வது இடத்தைப் பிடித்தார். இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவிக்கு அவர் எந்த ஒரு போட்டியுமின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலானது உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஷ்வர ராவ் மேற்பார்வையில் நடைபெற்றது.
இதையும் படிக்க: எங்கே சென்று கொண்டிருக்கிறது மாண்டஸ்?
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் 95 ஆண்டுகால வரலாற்றில் சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்ற ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இருபது ஆண்டுகளாக தடகளப் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த பி.டி.உஷா கடந்த 2000 ஆம் ஆண்டில் தனது ஓய்வு முடிவினை அறிவித்தார்.
பி.டி.உஷா கடந்த ஜூலை மாதம் பாஜகவினால் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.