கார் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் நலம் பெற பாகிஸ்தான் வீரர் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் சென்ற கார் உத்தர்காண்ட் ஹம்மத்பூர் ஜால் பகுதியில் இன்று (டிசம்பர் 30) கார் விபத்துக்குள்ளானது. இதில் ரிஷப் பந்த் படுகாயமடைந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரிஷப் பந்த், தில்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு சென்று கொண்டிருந்தார். கார் வெள்ளிக்கிழமை அதிகாலை உத்தரகாண்ட் மாநிலம், ஹம்மத்பூர் ஜால் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது.
இதில், கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் முதுகு மற்றும் தலையில் பலத்த காயம் அடைந்தார்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ரிஷப் பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பிசிசிஐ சார்பிலும் ரிஷப் பந்த் விரைந்து குணமடைய வேண்டும் எனவும், அவரது குடும்பத்துக்கு பிசிசிஐ துணை நிற்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: 'துணிவு’ படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுகம்
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது: கடவுளுக்கு நன்றி. ரிஷப் பந்த் காப்பாற்றப்பட்டுள்ளார். அவர் விரைந்து குணமடைய பிரார்த்தனை செய்து கொள்கிறேன். அவர் விரைவில் நலம் பெறுவார் எனப் பதிவிட்டுள்ளார்.
அதேபோல பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் அஃப்ரிடி தனது டிவிட்டர் பதிவில் கூறியதாவது: ரிஷப் பந்த் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.