தென் ஆப்பிரிக்காவுடனான மகளிர் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தின்போது இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஹெல்மட்டில் பந்து தாக்கியதையடுத்து, அவர் பாதியில் வெளியேறினார்.
மகளிர் உலகக் கோப்பை முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. ஐசிசி தளத்தில் வெளியான தகவலின்படி, ஆட்டத்தின் தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயில் வீசிய பவுன்சர் பந்து மந்தனாவைத் தாக்கியுள்ளது.
இதையும் படிக்க | மெத்வதெவை மீண்டும் வீழ்த்தினாா் நடால்: மெக்ஸிகன் ஓபன்
இதையடுத்து, அணியின் மருத்துவர் அவரைப் பரிசோதித்ததில் விளையாடுவதற்கு அவர் தகுதியாக இருப்பதாகவே முடிவெடுக்கப்பட்டது. ஆனால், 9 பந்துகளுக்குப் பிறகு மீண்டும் பரிசோதிக்கப்பட்டது. இதன்பிறகே, அவர் ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறியுள்ளார்.
மருத்துவர் அதிகாரிபடி, அவருக்கு கன்கஷனுக்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை, எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவர் களத்திலிருந்து வெளியேறியிருக்கிறார். தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கின் தொடக்கத்தில் அவர் பீல்டிங் செய்யவில்லை.