இந்தியாவிற்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் 216 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து அணி.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இங்கிலாந்தில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து, இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்கார்களாக ஜோஸ் பட்லர் மற்றும் ஜேசன் ராய் களமிறங்கினர். இந்த இணை தொடக்கத்திலேயே அதிரடியாக ஆடியது. இருப்பினும், ஜோஸ் பட்லர் 18 ரன்களிலும், ஜேசன் ராய் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய பில் சால்ட் 8 ரன்களில் ஹர்சல் படேல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன்பின், டேவிட் மலன் மற்றும் லயன் லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்தனர். டேவிட் மலன் தொடக்கம் முதலே அபாரமன ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை திணறடித்தார். ஒவ்வொரு ஓவரிலும் சிக்சர்கள் பறந்த வண்ணமே இருந்தன. மறுமுனையில், லயம் லிவிங்ஸ்டன் அவரது பங்கிற்கு அவ்வப்போது சிக்சர்களை பறக்கவிட இங்கிலாந்து அணியின் ரன்ரேட் ஜெட் வேகத்தில் பயணித்தது. சிறப்பாக விளையாடிய டேவிட் மலன் 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். அரைசதம் கடந்த பின் மலன் ஆட்டத்தினை தனது பேட்டிங்கை அடுத்த கியருக்கு மாற்றினார். சிறப்பாக விளையாடிய அவர் ரவி பிஷ்னோய் வீசிய பந்தில் சிக்சர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். அவர் 39 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். அதில் 6 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் அடங்கும்.
மலனைத் தொடர்ந்து களமிறங்கிய மொயீன் அலி முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதன் மூலம் ரவி பிஷ்னோய் வீசிய 17-வது ஓவரில் இந்திய அணிக்கு 2 விக்கெட்டுகள் கிடைத்தன. பின்னர் லயம் லிவிங்ஸ்டனுடன் ஜோடி சேர்ந்தார் ப்ரூக். அவர் வந்த வேகத்தில் ஆவேஷ் கான் பந்தில் தொடர்ச்சியாக 2 பவுண்டரிகள் அடித்தார். அதே ஓவரில் லயம் லிவிங்ஸ்டன் ஒரு சிக்சரை பறக்கவிட அந்த ஓவரில் இங்கிலாந்து அணிக்கு 21 ரன்கள் கிடைத்தன. ஹர்சல் படேல் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தில் லயம் லிவிங்ஸ்டன் கொடுத்த எளிமையான கேட்சினை விராட் கோலி தவறவிட்டார். அந்த ஓவரில் இங்கிலாந்து அணி ப்ரூக் விக்கெட்டினை இழந்து 8 ரன்கள் எடுத்தது.
உம்ரான் மாலிக் வீசிய கடைசி ஓவரில் கிறிஸ் ஜோர்டான் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி அடிக்க அந்த அணிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் கிடைத்தன. இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் குவித்தது.
இந்திய அணியின் சார்பில் ரவி பிஷ்னோய் மற்றும் ஹர்சல் படேல் தலா 2 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் மற்றும் உம்ரான் மாலிக் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.