நான் தான் டிக்ளேர் செய்யச் சொன்னேன்: ஜடேஜா
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் டிக்ளேர் செய்தது தொடர்பாக ஜடேஜா விளக்கம் அளித்துள்ளார்.
மொஹலியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டை இந்திய அணி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 129.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 175 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார் ரோஹித் சர்மா. இதனால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தார்கள். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 174 ரன்கள் எடுத்து ஃபாலோ ஆன் ஆகி, 2-வது இன்னிங்ஸில் 178 ரன்களுடன் இன்னிங்ஸ் தோல்வியை எதிர்கொண்டது. இதனால் 2 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
முதல் இன்னிங்ஸில், தான் இரட்டைச் சதம் அடிக்கும் முன்பு டிக்ளேர் செய்தது பற்றி ஜடேஜா கூறியதாவது:
ஆடுகளத்தில் பவுன்ஸ் நிலையற்று இருந்தது. பந்துகள் நன்குச் சுழல ஆரம்பித்தன. எனவே ஆடுகளத்தில் நமக்குச் சாதகமான சூழல் உள்ளது. இப்போதே இலங்கை அணியை பேட்டிங் செய்யச் சொல்லலாம் எனத் தகவல் அனுப்பினேன். ஏனெனில் இரண்டு நாளாக ஃபீல்டிங் செய்து அவர்கள் சோர்வாக இருந்தார்கள். அதனால் உடனடியாக பேட்டிங்கில் பெரிய ஷாட்டை அடிக்க முடியாது, நீண்ட நேரம் விளையாட முடியாது. எனவே விரைவாக டிக்ளேர் செய்து, எதிரணி பேட்டர்களின் சோர்வைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எங்களின் திட்டமாக இருந்தது என்றார்.