ஆடவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ந்து 5 சதங்கள் எடுத்த முதல் வீரர் என்கிற உலக சாதனை படைத்ததுடன் 114 பந்துகளில் இரட்டைச் சதமும் அடித்து அசத்தியுள்ளார் 26 வயது தமிழக வீரர் ஜெகதீசன்.
பெங்களூரில் நடைபெறும் விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியில் தமிழகமும் அருணாசல பிரதேசமும் மோதி வருகின்றன. டாஸ் வென்ற அருணாசல பிரதேச அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
இதற்கு முன்பு தொடர்ச்சியாக 4 சதங்கள் எடுத்த தமிழக வீரர் ஜெகதீசன் இன்று தனது தொடர்ச்சியான 5-வது சதத்தை எடுத்து புதிய உலக சாதனை படைத்தார். மற்றொரு தொடக்க வீரரான சாய் சுதர்சனும் சதமடித்தார். இந்த வருட விஜய் ஹசாரே போட்டியில் சாய் சுதர்சன் எடுத்துள்ள 3-வது சதம் இது.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 சதங்கள் எடுத்த முதல் வீரர் என்கிற உலக சாதனையைப் படைத்துள்ளார் ஜெகதீசன். விஜய் ஹசாரே போட்டியிலும் தொடர்ச்சியாக 5 சதங்கள் எடுத்த முதல் வீரர் என்கிற பெருமையையும் அடைந்துள்ளார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஜெகதீசன் 114 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் இரட்டைச் சதமடித்து அசத்தினார். முதல் 100 ரன்களை 76 ரன்களில் எடுத்த ஜெகதீசன், அடுத்த 100 ரன்களை 38 பந்துகளில் எடுத்தார்.
தமிழக அணி 35 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 368 ரன்கள் எடுத்துள்ளது. ஜெகதீசன் 227, சாய் சுதர்சன் 134 ரன்களுடன் தொடர்ந்து விளையாடி வருகிறார்கள்.