பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பஞ்சாப் கிரிக்கெட் வாரியத்தின் முதன்மை ஆலோசகராக உள்ள ஹர்பஜன் சிங் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: செல்லப் பிராணிகளுடன் பயணிக்கலாம்: ஆகாசா ஏர் அறிவிப்பு
அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “ கடந்த பத்து நாட்களாக எனக்கு பஞ்சாப் கிரிக்கெட் பிரியர்களிடமிருந்து நிறைய குற்றச்சாட்டுகள் வருகின்றன. பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் நிறைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக புகார் வந்துள்ளது. இது நேர்மையாக ஒளிவு மறைவு இல்லாமல் நடைபெறும் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு எதிரானதாகும். பஞ்சாப் கிரிக்கெட் வாரியத்தின் நேர்மைக்கு இது போன்ற சட்டவிரோத செயல்பாடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் அவப்பெயரை ஏற்படுத்தும். அதனால் இது போன்ற சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் உடனடியாக அதனை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.
ஹர்பஜன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.