முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனி வெளிநாட்டு டி20 போட்டிகளில் பயிற்சியாளராக செயல்பட முடியாதென பிசிசிஐ தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் புதியாதாக டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவிருக்கிறது. இதில் இந்தியாவை சேர்ந்த ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் தங்களுக்கென அணியை வாங்கியுள்ளனர். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தனக்கென ஒரு அணியை உருவாக்கியுள்ளது. இந்த அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் மற்றும் சிஎஸ்கே கேப்டன் தோனி பயிற்சியாளராக செயல்படுவாரென எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், பிசிசிஐ அதிகாரிகள் தோனி வெளிநாட்டு டி20 போட்டிகளில் பயிற்சியாளராக செயல்பட முடியாது. அப்படி அவர் பங்கேற்க விரும்பினால் ஐபிஎல் போட்டியில் இருந்து விலக வேண்டுமென கூறப்படுகிறது.
ஏற்கனவே, இந்திய வீரர்கள் வெளிநாட்டு டி20 போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது பயிற்சியாளார்க பங்கேற்கக்கூட ஒருவர் ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டுமென கூறப்படுகிறது.
இந்தியாவின் இந்த முடிவிற்கு ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கில்கிரிஸ்ட், “நான் ஐபிஎல் போட்டிகளை விமர்சனம் செய்யவில்லை. மற்ற வெளிநாட்டு வீரர்கள் போல் இந்திய வீரர்களும் பிக்பேஷ் போன்ற டி20 போட்டிகளில் விளையாட வேண்டும்” என கருத்து தெரிவித்திருந்தார்.
பழைய அதிகாரத்தை வைத்துக்கொண்டு இந்திய வீரர்களை வெளிநாட்டு போட்டிகளில் விளையாட முடியாமல் செய்வது நல்லதல்ல என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவாஸ்கரும் பிசிசிஐயின் இந்த நிலைப்பாடு குறித்து விமர்சனம் தெரிவித்துள்ளார்.