ஆசியக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக இலங்கையை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான். முதலில் பேட்டிங் செய்த இலங்கை 105 ரன்களுக்குச் சுருண்டது. அதைவிடவும் இந்த இலக்கை 10.1 ஓவர்களில் எட்டியது ஆப்கானிஸ்தான். இதுபோல முதல் ஆட்டம் எல்லாவிதமாகவும் இலங்கைக்கு மோசமான அனுபவமாகவே இருந்தது. ஆனால் ஆப்கானிஸ்தான் ரசிகர்களுக்ளோ அந்த ஆட்டம் மறக்க முடியாத அனுபவத்தைத் தந்தது.
இன்று தனது 2-வது ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான்.
சர்வதேச டி20 ஆட்டங்களில் ஆப்கானிஸ்தானும் வங்கதேசமும் இதுவரை 8 ஆட்டங்களில் மோதியதில் 5 ஆட்டங்களில் வென்று முன்னிலை பெற்றுள்ளது ஆப்கானிஸ்தான் அணி. சமீபத்தில் இரு அணிகளுக்கும் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமன் ஆனது.
இந்தியா - பாகிஸ்தான் போல வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் ஆட்டமும் பரபரப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் ஹஸ்ரதுல்லா - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை இந்த ஆட்டத்திலும் அதிரடியாக விளையாட அதிக வாய்ப்புள்ளது. இலங்கை எதிராக இருவரும் இணைந்து 13 பவுண்டரிகளை அடித்தார்கள். ரஹ்மனுல்லா குர்பாஸ் 4 சிக்ஸர்களுடன் 18 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ஃபரூகி அபாரமாகப் பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். ஆப்கானிஸ்தான் அணியா இது என ஆச்சயப்படுத்தினார்கள்.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரு வெள்ளைப் பந்து தொடர்களிலும் சமீபத்தில் தோற்றது வங்கதேச அணி. இதனால் அந்த அணி வீரர்கள் எந்தளவுக்குத் தன்னம்பிக்கையுடன் உள்ளார்கள் என்பதை இன்றைய ஆட்டம் வெளிப்படுத்தி விடும். அந்தத் தொடரில் பிரபல வங்கதேச வீரர்களான ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹிம் விளையாடவில்லை. இந்தப் போட்டியில் அவர்கள் விளையாடுவது அணிக்குப் பெரிய ஊக்கமாக அமையும். மூன்று வருடங்கள் கழித்து வங்கதேச டி20 அணியின் கேப்டனாகியிருக்கிறார் ஷகிப் அல் ஹசன்.
இன்றைய ஆட்டத்திலும் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றுவிட்டால் இந்தப் போட்டியில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும்.