டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக உலகக் கோப்பை ஆட்டங்களைப் பார்க்க வங்கதேச வீரர்களுக்குத் தடை விதித்துள்ளார் அந்த அணியின் பயிற்சியாளர் ரஸ்ஸல் டொமிங்கோ.
இந்தியா - வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட், நாளை தொடங்குகிறது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என வென்றது வங்கதேச அணி. காயம் காரணமாக ரோஹித் சர்மா முதல் டெஸ்டில் இடம்பெறவில்லை. பும்ரா, ஷமி, ஜடேஜா ஆகியோரும் காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இடம்பெறவில்லை. இதனால் கே.எல். ராகுல் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். உனாட்கட், அபிமன்யு ஈஸ்வரன், செளரப் குமார், நவ்தீப் சைனி ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் அணியின் பயிற்சியாளர் ரஸ்ஸல் டொமிங்கோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டெஸ்ட் தொடர் இருப்பதால் எங்களுடைய வீரர்கள் சீக்கிரம் உறங்கச் செல்ல வேண்டும். அடுத்த நாள் காலை 9.30 மணிக்கு டெஸ்டில் கலந்துகொள்ளும் ஒரு வீரர், அதிகாலை 3 மணி வரைக்கும் கால்பந்து ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அது முட்டாள்தனமானது. எங்களுடைய வீரர்கள் அப்படிச் செய்தால் நான் மிகவும் வேதனையடைவேன் என்றார்.
கத்தார் உலகக் கோப்பைப் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்று நடைபெறும் முதல் அரையிறுதிச் சுற்றில் ஆர்ஜென்டீனா - குரோசியா அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியன் பிரான்ஸும் மொராக்கோவும் நாளை மோதுகின்றன. இந்த இரு ஆட்டங்களும் வங்கதேச நேரப்படி நள்ளிரவு 1 மணிக்குத் தொடங்குகின்றன.