கத்தார் உலகக் கோப்பைப் போட்டிக்கு அரையிறுதிக்குத் தகுதி பெற்று சாதனை படைத்த மொராக்கோ அணி, அரையிறுதியில் 0-2 என பிரான்ஸிடம் தோல்வியடைந்தது. கால்பந்து உலகக் கோப்பையில் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க நாடு என்கிற பெருமையை அடைந்தது மொராக்கோ.
இந்நிலையில் இந்த ஆட்டம் முடிந்த பிறகு மொராக்கோ கோல் கீப்பர் யசின் பனோ, தனது மகனை இடுப்பில் வைத்துக்கொண்டு பேட்டியளித்தார். தனக்கு அருகில் இருந்த மைக்கைப் பார்த்த பனோவின் மகன், அதை ஐஸ்கிரீம் என எண்ணி, நாக்கை நீட்டி மைக்கைச் சாப்பிட முயன்றான். சிரித்துக்கொண்டே மகனின் செயலை ரசித்தார் பனோ. இதன்பிறகு இன்னொருமுறையும் நாக்கை நீட்டியபடி மைக்கை சாப்பிட மகன் முயல, அப்போது தன் மகனுக்கு அவன் செய்த தவறைச் சுட்டிக்காட்டினார் பனோ. சமூகவலைத்தளத்தில் இந்தக் காணொளியைப் பகிர்ந்துள்ளது ஃபிஃபா.