இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் சென்ற கார் விபத்துக்குள்ளானபோது அந்த வழியாகச் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநரும், நடத்துனரும் அவரை காரிலிருந்து வெளியே இழுத்து காப்பாற்றியுள்ளனர்.
ரிஷப் பந்தை வெளியே இழுத்த சில நொடிகளில் கார் முழுவதுமாக தீக்கிரையானது. கார் விபத்தின்போது ஓட்டுநர், நடத்துனரிடம் ரிஷப் பந்த் பேசியவை குறித்து அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலம் ரூா்கியில் உள்ள தனது தாயை பாா்க்க தில்லியில் இருந்து ரிஷப் பந்த் வெள்ளிக்கிழமை அதிகாலை காரில் சென்றாா். அந்த மாநிலத்தின் மங்லெளா் பகுதி வழியாக சென்றபோது எதிா்பாராதவிதமாக ரிஷப் பந்தின் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலை தடுப்பில் மிக வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. அவா் உறங்கியதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், விபத்தை நேரில் கண்ட அரசுப் பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் உடனடியாகச் சென்று காரில் ரத்த காயங்களுடனிருந்த ரிஷப் பந்தை காரிலிருந்து வெளியே இழுத்து காப்பாற்றினர். பின்னர் சில நொடிகளில் கார் தீப்பற்றி எரிந்தது.
படுகாயமடைந்த நிலையிலிருந்த ரிஷப் பந்த், தான் இந்திய கிரிக்கெட் அணி வீரர் எனக் குறிப்பிட்டதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடத்துநர் பரம்ஜீத் சிங் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியதாவது,
நாங்கள் காரில் ரத்த காயங்களுடன் இருந்தவரை (ரிஷப் பந்த்) வெளியே இழுத்தோம். அவரை இழுத்த 5 - 7 நொடிகளில் கார் தீப்பற்றி எரிந்தது. அவரின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. அவர் உடலைச் சுற்றி துணியால் சுற்றினோம். அப்போது அவரின் தனிப்பட்ட விவரம் குறித்து அவரிடம் கேட்டோம். அப்போது நான் இந்திய கிரிக்கெட் அணி வீரர் எனக் குறிப்பிட்டார். என்னுடன் இருந்த சக ஊழியர் அவரை அடையாளம் கண்டுகொண்டார் எனக் குறிப்பிட்டார்.
ரிஷப் பந்த் உயிரைக் காத்த ஓட்டுநர் சுஷில் குமார், நடத்துநர் பரம்ஜீத் சிங் ஆகியோருக்கு ஹரியாணா அரசு நற்கருணை விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கெளரவித்துள்ளது.