கடந்த வருடம் சிஎஸ்கே அணியில் விளையாடிய டு பிளெஸ்ஸிஸ், ஆர்சிபி அணி கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
ஐபிஎல் ஏலத்தில் ஃபாஃப் டு பிளெஸ்சிஸ்ஸை ரூ. 7 கோடிக்குத் தேர்வு செய்து சென்னை ரசிகர்களை வேதனைப்படுத்தியுள்ளது ஆர்சிபி அணி. சிஎஸ்கே, புணே அணிகளுக்காக ஐபிஎல் போட்டியில் 100 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் டு பிளெஸ்சிஸ். 22 அரை சதங்களுடன் 2,935 ரன்கள் எடுத்துள்ளார். 2021 போட்டியில் சிஎஸ்கேவில் விளையாடிய டு பிளெஸ்சிஸ், 16 ஆட்டங்களில் 633 ரன்கள் எடுத்தார்.
ஆர்சிபி அணி, டு பிளெஸ்சிஸைத் தேர்வு செய்ததற்கான காரணத்தை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:
100 சதவீதம். ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிளெஸ்சிஸ் தான். நிச்சயமாக இதை அறிவிப்பார்கள். இல்லாவிட்டால் வேறு வீரர்களைத் தேர்வு செய்ய வாய்ப்புகள் இருந்தபோது அவர்கள் ஏன் டு பிளெஸ்சிஸ்ஸைப் போராடித் தேர்வு செய்யவேண்டும்? தொடக்க வீரர்கள் தான் வேண்டுமென்றால் பேர்ஸ்டோ, ஜேசன் ராயைத் தேர்வு செய்திருக்கலாம். வார்னர், குயிண்டன் டி காக் ஆகியோரைத் தேர்வு செய்யவும் மெனக்கெடவில்லை. டு பிளெஸ்சிஸ் தான் தங்களுடைய கேப்டன் என்பதில் ஆர்சிபி அணி உறுதியாக இருந்துள்ளது என்றார்.
முன்னாள் வீரர் சபா கரீமும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் கூறியதாவது:
இதில் யோசிக்க எதுவுமில்லை. கேப்டனாகத் தேர்வு செய்யத்தான் டு பிளெஸ்சிஸ்ஸை அணிக்குள் கொண்டுவந்துள்ளார்கள். அணியை வழிநடத்த அவரே நெ.1 வீரராக இருப்பார் என்றார்.