ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா, இலங்கை இடையிலான கடைசி டி20 ஆட்டம் மெல்போர்னில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்கள் ஃபிஞ்ச் மற்றும் பென் மெக்டெர்மாட் மோசமான தொடக்கத்தைத் தந்து முறையே 8 மற்றும் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதன்பிறகு, ஜோஷ் இங்லிஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஓரளவு நல்ல பாட்னர்ஷிப்பை அமைத்தனர். இறுதியில் மேத்யூ வேட் ஆட்டமிழக்காமல் 27 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். இதனால், ஆஸ்திரேலிய ஸ்கோர் 150 ரன்களைத் தாண்டியது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.
155 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கைக்கு தொடக்க ஆட்டக்காரர் குசால் மெண்டிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 71 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறிய இலங்கைக்கு மெண்டிஸ், கேப்டன் தசுன் ஷனாகா இணை சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்தது. ஷனாகா 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
மெண்டிஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்து 58 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார்.
19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்த இலங்கை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை முழுமையாக இழப்பதிலிருந்து இலங்கை தப்பியது.
இதைத் தொடர்ந்து, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி பிப்ரவரி 24-ம் தேதி முதலில் டி20 தொடரில் விளையாடுகிறது.