மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் பிரபல வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிறிஸ் பிராட் ஆகிய இருவரும் சேர்க்கப்படவில்லை. ஆஷஸ் தொடரில் மோசமாகத் தோல்வியடைந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 8 முதல் மேற்கிந்தியத் தீவுகளில் 3 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது இங்கிலாந்து அணி.
இந்நிலையில் பிபிசி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியதாவது:
இதுவே முடிவாக இருந்துவிடக் கூடாது என பிரார்த்தனை செய்கிறேன். ஒருவேளை இங்கிலாந்துக்காக இனிமேல் என்னால் விளையாட முடியாமல் போனால் எனக்கு ஆதரவாகப் பலர் உள்ளார்கள் என்பதை நான் அறிவேன். இன்னும் பங்களிக்க நிறைய உள்ளது. விளையாடிச் சாதிப்பதற்கான ஆர்வம் என்னிடம் உள்ளது.
நான் தேர்வாகவில்லை என்பதைத் தெரிவித்தபோது அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது. எனினும் சிறப்பாகப் பந்துவீசுவதைப் போன்ற என்னால் எதைக் கட்டப்படுத்த முடியுமோ அதில்தான் கவனம் செலுத்த முடியும் என்றார்.
ஆஷஸ் தோல்வியின் எதிரொலியாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து ஆஷ்லி கைல்ஸ் நீக்கப்பட்டார். இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருந்த கிறிஸ் சில்வர்வுட்டின் பதவியும் பறிக்கப்பட்டது. இதையடுத்து புதிய நிர்வாகிகளின் தலைமையில் இங்கிலாந்து அணி புதிய பயணத்துக்குத் தயாராகியுள்ளது.