ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு புள்ளியை இழந்துள்ளது.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் இன்று தொடங்குகிறது.
முதல் டெஸ்டில் இந்திய அணி ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் ஒரு புள்ளியை இழந்துள்ளது. இதுபற்றி இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது:
விதிமுறைகள் அனைவருக்கும் ஒன்றாகத்தான் உள்ளன. கடினமான சூழலில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டு விளையாடினோம். இந்த விஷயத்தில் நாங்கள் இன்னும் சிறப்பாக செயலாற்றிருக்க வேண்டும். இதைப் பற்றி விவாதித்துள்ளோம். ஒரு புள்ளியை இழந்தது வருத்தமாக உள்ளது. ஒவ்வொரு புள்ளியும் முக்கியமாக வெளிநாடுகளில் எடுக்கும் ஒவ்வொரு புள்ளியும் கஷ்டப்பட்டு எடுப்பவை. இனிமேல் புள்ளிகள் எதையும் இழக்காமல் இருக்கவேண்டும். இதுபோன்று புள்ளிகளை இழந்த காரணத்துக்காக உலக சாம்பியஷிப் போட்டி இறுதிச்சுற்றில் பங்குபெறும் வாய்ப்பை நாங்கள் இழந்துவிடக் கூடாது என்றார்.
ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட காரணத்துக்காக இங்கிலாந்தில் இந்திய அணி ஏற்கெனவே இரு புள்ளிகளை இழந்த நிலையில் இதுவரை மொத்தமாக 3 புள்ளிகளை இழந்துள்ளது.