இங்கிலாந்து கேப்டன் இயன் மார்கனுக்குக் காயம் ஏற்பட்டதால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இங்கிலாந்து அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது. டி20 தொடர் ஜனவரி 23 முதல் ஜனவரி 31 வரை நடைபெறுகிறது. டெஸ்ட் தொடர், மார்ச் 8 முதல் மார்ச் 28 வரை நடைபெறுகிறது.
முதல் மூன்று ஆட்டங்களின் முடிவில் மே.இ. தீவுகள் அணி 2-1 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் காலில் காயம் ஏற்பட்டதால் 3-வது டி20 ஆட்டத்தில் விளையாடாத இங்கிலாந்து கேப்டன் இயன் மார்கன், மீதமுள்ள இரு டி20 ஆட்டங்களில் இருந்தும் விலகியுள்ளார். அந்த ஆட்டங்கள் ஜனவரி 29, ஜனவரி 30 தேதிகளில் நடைபெறும்.
3-வது டி20 ஆட்டத்தில் கேப்டனாக இருந்த மொயீன் அலி, மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் கேப்டனாக நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருட ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் விளையாடிய மொயீன் அலியை அந்த அணி தக்கவைத்துள்ளது.