ஷ்ரேயஸ் ஐயருக்குக் கூடுதல் வாய்ப்புகள் தேவை: நியூசி. முன்னாள் வீரர் சொல்லும் காரணம்

இந்த விஷயத்தில் சுரேஷ் ரெய்னா போல உள்ளார்...
ஷ்ரேயஸ் ஐயருக்குக் கூடுதல் வாய்ப்புகள் தேவை: நியூசி. முன்னாள் வீரர் சொல்லும் காரணம்

ஷ்ரேயஸ் ஐயருக்கு இந்திய அணியில் கூடுதல் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்று நியூசிலாந்து முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கூறியுள்ளார்.

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் தலா ஓர் ஆட்டத்தில் விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர் மொத்தமாக மூன்று இன்னிங்ஸிலும் 62 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் 5 ஆட்டங்களில் 94 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கு அடுத்ததாக இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது. இந்திய ஒருநாள், டி20 அணிகளில் ஷ்ரேயஸ் ஐயர் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் ஷ்ரேயஸ் ஐயர் பற்றி நியூசிலாந்து முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் ஒரு பேட்டியில் கூறியதாவது:

ஷ்ரேயஸ் ஐயரிடம் உள்ள தலைமைப்பண்பு எனக்கு மிகவும் பிடிக்கும். வருங்காலத்தில் அவர் இந்திய அணியின் கேப்டனாகவும் வாய்ப்புள்ளது. இந்தக் காரணத்துக்காக இந்திய அணியில் அவருக்குக் கூடுதல் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். அவரிடம் உள்ள எல்லாக் குணங்களும் எனக்குப் பிடிக்கும். அவருக்கு வாய்ப்புகள் கொடுத்து ரன்கள் எடுக்கவில்லையென்றால் இன்னொரு வீரரைத் தேர்வு செய்யலாம். 

ஷ்ரேயஸ் ஐயர் மிகவும் திறமையானவர். ஷார்ட் பந்துகளில் ரன்கள் எடுப்பதில் அவருக்குச் சிரமம் உள்ளது. இதனால் அவர் விளையாடும்போது பவுன்சர் பந்துகளை வீசுகிறார்கள். இதைச் சரிசெய்வதற்கான வழியை அவர் கண்டுபிடித்தாரா எனத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் சுரேஷ் ரெய்னா போல உள்ளார். இந்தச் சிக்கலைச் சரிசெய்துவிட்டால் இந்திய அணியின் பட்டியலில் அவர் நிச்சயம் இடம்பிடிப்பார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com