காமன்வெல்த் போட்டிகளில் பளுதூக்கும் பிரிவில் இந்திய வீரர் சங்கேத் சர்கார் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பா்மிங்ஹம் நகரில் தொடங்கியுள்ளன. இதில் 215 வீரா், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.
இங்கிலாந்து ராணியால் ஆளப்பட்ட 72 நாடுகள் கூட்டமைப்பு காமன்வெல்த் என அழைக்கப்படுகிறது. இந்நாடுகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடத்தப்படுகின்றன. உலகின் பெரிய விளையாட்டுத் திருவிழாக்களில் ஒன்றாக காமன்வெல்த் போட்டி உள்ளது. கடைசியாக கடந்த 2018-ல் ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலத்துடன் மொத்தம் 66 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றது.
முதல் நாளன்று இந்திய அணி எந்தப் பதக்கத்தையும் பெறவில்லை. இந்நிலையில் 2-ம் நாளான இன்று பளுதூக்கும் போட்டியில் இந்திய வீரர் சங்கேத் சர்கார் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஆடவர் 55 கிலோ எடைப்பிரிவில் 248 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.