உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை 2 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன.
முதலில், மகளிருக்கான 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவு இறுதிச்சுற்றில் அஞ்சும் முட்கில் 12-16 என்ற கணக்கில் டென்மாா்க்கின் ரிக்கி மேங் இப்சனிடம் வெற்றியை இழந்து வெள்ளிப் பதக்கம் பெற்றாா். தென் கொரியாவின் யுன்சியோ லீ 3-ஆம் இடம் பிடித்தாா். உலகக் கோப்பை போட்டிகளில் முட்கில் வென்றிருக்கும் 2-ஆவது வெள்ளி இது.
இப்பிரிவில் களம் கண்ட மேலும் இரு இந்தியா்களான ஆயுஷி போடா், ஆஷி சௌக்சி இறுதிச்சுற்றுக்கு முன்னேறத் தவறினா். அதேபோல், அணிகள் பிரிவில் அஞ்சும், ஆயுஷி, ஆஷி கூட்டணியும் பதக்கச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
அடுத்து, ஆடவருக்கான 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஸ்வப்னில் குசேல், தீபக் குமாா், கோல்டி குா்ஜா் கூட்டணி 7-17 என்ற புள்ளிகளில் குரோஷியாவிடம் தங்கத்தை இழந்து 2-ஆம் இடம் பிடித்தது. உக்ரைன் அணி வெண்கலம் வென்றது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, இந்தியா 1 தங்கம், 3 வெள்ளியுடன் பதக்கப் பட்டியலில் 3-ஆவது இடத்தில் இருக்கிறது.