பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சதமடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முல்தானில் நடைபெற்ற முதல் ஆட்டத்தை பாகிஸ்தான் அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த மே.இ. தீவுகள் அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் குவித்தது. விக்கெட் கீப்பர் பேட்டரான ஷாய் ஹோப் 127 ரன்களும் புரூக்ஸ் 70 ரன்களும் எடுத்தார்கள். ஹாரிஸ் ராஃப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்பிறகு பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 49.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்து முதல் ஒருநாள் ஆட்டத்தை வெற்றி பெற்றது. கேப்டன் பாபர் ஆஸம் 103 ரன்களும் இமாம் உல் ஹக் 65 ரன்களும் ரிஸ்வான் 59 ரன்களும் குஷ்தில் ஷா 23 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் ஆட்டமிழக்காமல் 41 ரன்களும் எடுத்தார்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் 85 இன்னிங்ஸில் 17 சதங்கள் எடுத்துள்ளார் பாபர் ஆஸம்.
ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 5 இன்னிங்ஸில் பாபர் ஆஸம்
158(139)
57(72)
114(83)
105*(115)
103(107)
இதன்மூலம் தொடர்ச்சியாக மூன்று சதங்களை இருமுறை எடுத்த முதல் வீரர் என்கிற சாதனையையும் ஒரு கேப்டனாக ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 1000 ரன்கள் எடுத்த வீரர் என்கிற மற்றொரு சாதனையையும் பாபர் ஆஸம் படைத்துள்ளார்.