சாதனை வெற்றியுடன் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற மும்பை அணி
By DIN | Published On : 09th June 2022 01:11 PM | Last Updated : 09th June 2022 01:23 PM | அ+அ அ- |

உத்தரகண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பைக் காலிறுதி ஆட்டத்தில் மும்பை அணி, 725 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.
பெங்களூரு - அலூரில் மும்பை - உத்தரகண்ட் அணிகளுக்கு எதிரான ரஞ்சி கோப்பைக் காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 166.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 647 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அறிமுக வீரர் சுவெத் பார்கர் 252 ரன்களும் சர்ஃபராஸ் கான் 153 ரன்களும் எடுத்தார்கள். இதன்பிறகு உத்தரகண்ட் அணி முதல் இன்னிங்ஸில் 41.1 ஓவர்களில் 114 ரன்களுடன் ஃபாலோஆன் ஆனது. 2-வது இன்னிங்ஸில் மும்பை அணி, 58 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர்கள் பிருத்வி ஷா 72, ஜெயிஸ்வால் 103 ரன்கள் எடுத்தார்கள்.
காலிறுதி ஆட்டத்தை வெற்றி பெற உத்தரகண்ட் அணிக்கு 795 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணி 27.5 ஓவர்களில் 69 ரன்களுக்குச் சுருண்டது. இதனால் மும்பை அணி காலிறுதி ஆட்டத்தை 725 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
முதல்தர கிரிக்கெட்டில் 725 ரன்கள் வித்தியாசத்தில் ஓர் அணி வெற்றி பெறுவது இதுவே முதல்முறை.
725 ரன்கள் - மும்பை v உத்தரகண்ட்
685 ரன்கள் - நியூ செளத் வேல்ஸ் v குயின்ஸ்லாந்து, 1930
675 ரன்கள் - இங்கிலாந்து v ஆஸ்திரேலியா, 1928
638 ரன்கள் - நியூ செளத் வேல்ஸ் v தென் ஆஸ்திரேலியா, 1921