5-வது டெஸ்டில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா விளையாடுவது குறித்து பதிலளித்துள்ளார் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.
இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. கடந்த வருடம் ரத்தான 5-வது டெஸ்ட், இம்முறை பிர்மிங்கமில் ஜூலை 1 அன்று முதல் நடைபெறவுள்ளது.
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து 5-வது டெஸ்டில் அவர் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது. இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது:
எங்களுடைய மருத்துவக் குழு, ரோஹித் சர்மாவைக் கண்காணித்து வருகிறது. 5-வது டெஸ்டிலிருந்து அவர் இன்னும் விலகவில்லை. தனக்கு கரோனா இல்லை என அவர் முதலில் உறுதிப்படுத்த வேண்டும். இன்னும் 36 மணி நேரம் உள்ளது. இன்றிரவு ஒரு பரிசோதனை அவருக்கு மேற்கொள்ளப்படும். பிறகு காலையிலும் ஒரு பரிசோதனை இருக்கலாம். அதன்பிறகு நிலைமை என்னவென்று பார்க்கலாம். கரோனாவாலிருந்து அவர் விடுபடவேண்டும். அவர் விளையாடுவது பற்றி மருத்துவக் குழு முடிவெடுக்கும். தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால் ரோஹித் சர்மாவை எங்களால் இன்னும் சந்திக்க முடியவில்லை. எனினும் நிலைமையைக் கண்காணித்து வருகிறோம் என்றார்.
ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் ஆகிய இருவராலும் விளையாட முடியாத சூழல் உள்ளதால் 5-வது டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கேப்டனாகச் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.