இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் பெங்களூரில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இந்த டெஸ்டுக்கான ஆடுகளம் குறித்த தனது மதிப்பீட்டை ஐசிசி அறிவித்துள்ளது.
238 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்ற பகலிரவு டெஸ்ட், மூன்று நாள்களிலேயே முடிவடைந்தது. முதல் நாள் முதல் பகுதியிலிருந்தே சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக ஆடுகளம் இருந்ததால் விமர்சங்களை எதிர்கொண்டது.
இந்நிலையில் பெங்களூரு ஆடுகளம் குறித்த மதிப்பீட்டை வழங்கியுள்ளது ஐசிசி. பெங்களூரு டெஸ்டின் போட்டி நடுவராகச் செயல்பட்ட ஜவகல் ஸ்ரீநாத், பெங்களூரு ஆடுகளம், சராசரிக்கும் கீழ் எனத் தனது மதிப்பீட்டை வழங்கியுள்ளார். பந்து முதல் நாளிலிருந்தே சுழலத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு கட்டத்திலும் இது அதிகமானது. பந்துக்கும் பேட்டுக்கும் இடையில் சமமான போட்டி உருவாகவில்லை என்று அவர் கூறியுள்ளார். இந்த டெஸ்டின் முதல் நாளன்று 16 விக்கெடுட்கள் வீழ்ந்தன. ஐசிசிக்கு ஸ்ரீநாத் வழங்கிய அறிக்கை பிசிசிஐக்கு அனுப்பப்பட்டுள்ளது. பெங்களூரு மைதானத்துக்கு ஒரு அபராதப் புள்ளி விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக முன்னாள் வீரரும் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் பணியாற்றிவருமான ஸ்ரீநாத். தன்னுடைய சொந்த ஊரின் மைதானம் குறித்து நேர்மையுடன் செயல்பட்டு வழங்கிய மதிப்பீட்டுக்குப் பாராட்டுகள் கிடைத்துள்ளன.