புது தில்லி: இஸ்தான்புல்லில் நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நிகாத் ஜரீன் வியாழக்கிழமை வாகை சூடினார். இப்போட்டியில் சாம்பியன் ஆன 5-ஆவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
52 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற அவர், இறுதிச்சுற்றில் 5-0 என்ற கணக்கில் தாய்லாந்தின் ஜித்போங் ஜுடாமûஸ தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் தனது தொடக்க சுற்று முதல் இறுதிச்சுற்று வரை அனைத்திலுமே எதிராளிக்கு ஒரு புள்ளியைக் கூட விட்டுக் கொடுக்காமல் 5-0 என்ற கணக்கிலேயே வெற்றிகளை பதிவு செய்துள்ளார் நிகாத்.
நிகாத் ஜரீனுக்கு முன், மேரி கோம் (2002, 2005, 2006, 2008, 2010, 2018), சரிதா தேவி (2006), ஜெனி ஆர்.எல். (2006), லேகா கே.சி. (2006) ஆகியோர் மட்டுமே உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகளாவர்.
இந்த ஆண்டு போட்டியில் நிகாத் ஜரின் தவிர்த்து, மனீஷா மெளன் (57 கிலோ), பர்வீன் ஹூடா (63 கிலோ) ஆகியோர் வெண்கலம் வென்றிருந்தனர்.