வழக்கமாக ஒரு வீரர் இந்திய டி20 அணியில், உலகக் கோப்பை அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?
உள்ளூர் ஆட்டங்களில் முதலில் விளையாடி திறமையை நிரூபிக்க வேண்டும்.
இதைப் பார்த்து விட்டு ஐபிஎல் ஏலத்தில் தேர்வு செய்வார்கள். இதன்பிறகு ஐபிஎல் போட்டியில் முதலில் விளையாட வேண்டும். திறமையை நன்கு வெளிப்படுத்தினால் தொடர் வாய்ப்புகள் கிடைக்கும்.
தேர்வுக்குழு உறுப்பினர்கள் இதைப் பார்த்து இந்திய அணிக்குத் தேர்வு செய்வார்கள்.
இந்திய அணிக்குத் தேர்வானாலும் 11 பேரில் ஒருவராக உடனே இடம் கிடைத்து விடாது. அதற்கும் போராட வேண்டும். இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்து திறமையாக விளையாடினால் பிறகு உலகக் கோப்பை அணியிலும் இடம் கிடைக்கும்.
இப்படித்தான் படிப்படியாக மேலேற முடியும்.
தமிழகத்தைச் சேர்ந்த 31 வயது வருண் சக்ரவர்த்திக்கு மட்டுமே எல்லாமே தலைகீழாக நடந்துள்ளது.
உள்ளூர் டி20 கிரிக்கெட்டில் எதிலும் விளையாடாமல் நேராக ஐபிஎல் போட்டியில் விளையாடினார் வருண் சக்ரவர்த்தி. அங்குத் திறமையை வெளிப்படுத்தியதால் இந்திய டி20 அணியில் விளையாட உடனே வாய்ப்பு கிடைத்தது. இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய வருண், அடுத்து நேராக டி20 உலகக் கோப்பைக்குத் தேர்வானார். ஐக்கிய அரபு அமீரகத்தில் 3 உலகக் கோப்பை ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
ஐபிஎல், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம், உலகக் கோப்பை என பெரிய தளங்களில் ஒரு சுற்று சுற்றி விட்டுக் கடைசியாக உள்ளூர் டி20 கிரிக்கெட்டில் விளையாட வந்திருக்கிறார் வருண் சக்ரவர்த்தி.
6 சர்வதேச டி20 ஆட்டங்கள், 42 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி முடித்த பிறகு தமிழக அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகியுள்ளார்.
2022 சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் தமிழக அணி முதல் ஆட்டத்தில் தோற்றாலும் வருண் அபாரமாகப் பந்து வீசினார். 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள் எடுத்து 12 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.