மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தகுதி சுற்றில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு பி பிரிவில் இருந்து முதல் அணியாக அயர்லாந்து தகுதி பெற்றுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணி உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகள் இன்று (அக்டோபர் 21) மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிரண்டன் கிங் 62 ரன்கள் குவித்தார். அயர்லாந்து தரப்பில் சிறப்பாக பந்து வீசிய கேரத் திலானி 16 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையும் படிக்க: நகைச்சுவை என்ன விலை?: ‘பிரின்ஸ்’ திரைப்பட விமர்சனம்
இதனையடுத்து, 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது அயர்லாந்து அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பால் ஸ்டிரிலிங் மற்றும் கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி களமிறங்கினர். அவர்கள் இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய ஆண்ட்ரூ 23 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின் பால் ஸ்டிரிலிங் உடன் லோர்கான் டக்கர் ஜோடி சேர்ந்தார். அவரும் அதிரடியாக விளையாட இந்த ஜோடி அயர்லாந்து அணிக்கு வெற்றியைத் தேடி தந்தது. சிறப்பாக விளையாடிய பால் ஸ்டிரிலிங் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 48 பந்துகளில் 66 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். லோர்கான் டக்கர் 35 பந்துகளில் 45 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இதன்மூலம், அயர்லாந்து அணி 17.3 ஓவர்களில் இலக்கினை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது.
இதையும் படிக்க: வெறும் உளவாளியா.. அசாதாரண உளவாளியா? - ’சர்தார்’ திரை விமர்சனம்
இந்த வெற்றியின் மூலம் பி பிரிவில் இருந்து முதல் அணியாக அயர்லாந்து சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தது. இன்றையப் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் உலகக் கோப்பை தொடரில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்த உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.