பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன்ஷா அஃப்ரிடி தனது காயத்திற்கு சொந்த செலவிலே மருத்துவம் பார்க்கிறார் என பிசிபி மீது முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் குற்றம் சாட்டியுள்ளார்.
22 வயதான பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின்ஷா காயம் காரணமாக ஆசியக் கோப்பை போட்டிகளில் விளையாடவில்லை. அவரது இழப்பு அந்த அணிக்கு மிக முக்கியமாக இருந்தது.
டி20 உலக கோப்பை அணியில் அவரது பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர் தற்போது லண்டனில் தனது காயத்திலிருந்து மீண்டு வர மருத்துவம் பார்த்து வருகிறார். இது குறித்து முன்னாள் பாகிஸ்தான் கேப்டன், ஆல்ரவுண்டர் ஷாஹித் அஃப்ரிடி கூறியதாவது:
ஷாஹீனுடன் பேசினேன். அவர் தனது சொந்த செலவில் இங்கிலாந்து சென்றுள்ளார். டிக்கெட் வாங்குவது, விடுதியில் தங்குவது உட்பட எல்லாமே அவரது சொந்த செலவு. நான்தான் அவருக்கு மருத்துவரை பரிந்துரைத்தேன். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) எதுவுமே செய்யவில்லை. எனக்குத் தெரிந்து ஒன்றோ அல்லது இரண்டோ முறை பிசிபி தலைவர் ஷாகினிடம் பேசியுள்ளார். மற்றபடி எல்லா செலவும் ஷாஹீனே பார்த்து வருகிறார்.