அடுத்த வாரம் லண்டனில் நடைபெறவுள்ள லேவர் கோப்பைப் போட்டியுடன் டென்னிஸுக்கு விடை தருகிறார் ரோஜர் ஃபெடரர். கடந்த 24 வருடங்களில் 1,500க்கும் அதிகமான டென்னிஸ் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஆடவர் பிரிவில் 8 விம்பிள்டன் பட்டம் வென்ற ஒரே வீரர் ஃபெடரர் தான். கடைசியாக விளையாடிய கிராண்ட் ஸ்லாம் போட்டி - 2021 விம்பிள்டன்.
டென்னிஸ் போட்டிகளில் விளையாடி அதன் மூலம் ஃபெடரருக்குக் கிடைத்த பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா? ரூ. 1,043 கோடி (131 மில்லியன் டாலர்). டென்னிஸ் போட்டிகளில் ஃபெடரரை விடவும் ஜோகோவிச், நடால் அதிகம் சம்பாதித்துள்ளார்கள். (ஜோகோவிச் - ரூ. 1,266 கோடி, நடால் - ரூ. 1051 கோடி.)
ஆனால் டென்னிஸ் அரங்கத்துக்கு வெளியே ஃபெடரருக்கு நிகராக வருமானம் ஈட்டிய டென்னிஸ் வீரர் என யாருமில்லை. ஃபோர்ப்ஸ் வெளியிட்ட தகவலின்படி விளம்பரங்கள் மற்றும் வியாபார ஒப்பந்தங்களின் மூலம் 1.1 பில்லியன் டாலர் ஈட்டியுள்ளார் ஃபெடரர். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 8,762 கோடி (ஏஜெண்ட்களின் ஊதியம், வரிகள் இல்லாமல்). ஆனால் நடால் ரூ. 3,983 கோடியும் ஜோகோவிச் 3,744 கோடியும் மட்டுமே விளம்பரங்கள் மற்றும் இதர வழிகளில் ஈட்டியுள்ளார்கள். இதனால் டென்னிஸுக்கு வெளியே நடால், ஜோகோவிச்சை விடவும் இரு மடங்கு அதிகமாக வருமானம் ஈட்டி வருகிறார் ஃபெடரர்.
நடப்பில் உள்ள விளையாட்டு வீரர்களில் ஃபெடரர் உள்பட 7 வீரர்கள் மட்டுமே இந்த 1 பில்லியன் டாலர் வருமானம் என்கிற உயரத்தை எட்டியுள்ளார்கள்.