ஜுலன் கோஸ்வாமியின் இன்ஸ்விங் சவாலாக இருந்தது: ரோஹித் சர்மா
இந்திய மகளிர் அணியின் அனுபவம் வாய்ந்த வீராங்கனை ஜுலன் கோஸ்வாமியின் பந்து வீச்சைக் குறித்து ஆடவர் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
39 வயதான ஜுலன் கோஸ்வாமி இந்திய மகளிர் அணியின் அனுபமிக்க வேகப் பந்து வீராங்கனை. இவர் 250 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் முடிந்த பிறகு ஓய்வை அறிவிப்பதாக இருக்கிறார். முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. டி20 தொடரை இங்கிலாந்து அணி வென்றது.
இதையும் படிக்க | வெந்து தணிந்தது காடு: 4 நாளில் வசூல் 50 கோடிகளை தாண்டியது!
ஆஸி. டி20 தொடர் செய்தியாளர் சந்திப்பின்போது ஜுலன் கோஸ்வாமி குறித்து இந்திய ஆடவர் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:
நான் காயம் காரணமாக என்சிஏவில் இருக்கும்போது அவரை சில முறை சந்தித்து இருக்கிறேன். அவர் எனக்கு பந்து வீசியுள்ளார். அவரது இன்ஸ்விங் எனக்கு சவாலாக இருந்தது.
இந்திய மகளிர் அணிக்கு அவர் செய்ததை வைத்துக் கூற வேண்டுமானால் அவர் உறுதியான பலமிக்க ஒரு வீராங்கனை. அவரது விளையாட்டை பார்க்கும்போது அவர் நாட்டுக்காக எவ்வளவு அர்ப்பணிப்புடன் விளையாடுகிறார் எனத் தோன்றும். ஆடவர் அணி அல்லது மகளிர் அணி வித்தியாசமின்றி எல்லா குழந்தைகளு அவரிடம் இருந்து இதைக் கற்றுக்கொள்ளலாம்.
அவரது வயது பற்றி எனக்கு தெரியாது. இப்போதும் அவர் ஓடிவந்து வேகமாக பந்து வீசி எதிரணியை வீழ்த்துவதைப் பார்க்கும்போது அவர் கிரிக்கெட் மீது வைத்திருக்கும் ஆரவம் தெரிகிறது.
அவரைப் போன்ற வீரர் / வீராங்கனை கிடைப்பது அரிது. தலைமுறைக்கு ஒருமுறைதான் இப்படிப்பட்டவர்கள் கிடைப்பார்கள். அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.
மிதாலி, ஜுலன் கோஸ்வாமி ஆகிய இருவரும் இந்திய மகளிர் கிரிக்கெட்டை அடுத்த தளத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். தற்போதைய அணி அதை சிறப்பாக வழி நடத்திச் செல்வதை பார்க்க முடிகிறது.