இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-2 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியுடன் விளையாடி தொடரை கைப்பற்றி மேற்கிந்தியத் தீவுகள் சாதனை படைத்துள்ளது.
முக்கியமான போட்டியில் கேப்டன் ஹார்திக் பாண்டியா 18 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார். பௌலிங்கில் 3 ஓவர்களில் 32 கொடுத்தும் சொதப்பியது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியின் தோல்விக்குப் பிறகு கேப்டன் ஹார்திக் பாண்டியா, “நாங்கள் 10 ஓவருக்குப் பிறகுதான் தோல்வியுற்றோம். நான் பேட்டிங் வந்தபோது ரன்கள் அடிக்க முடியவில்லை. எனக்கான நேரம் எடுத்துக் கொண்டேன். ஆனால் நினைத்தபடி முடிக்கவில்லை.
அணியாக நாங்கள் சவாலினை எதிர்கொண்டோம். எல்லா போட்டிகளில் இருந்தும் கற்றுக் கொண்டோம். ஒரு தொடரினை இழந்ததால் பெரிய பாதிப்பில்லை. எங்களின் நோக்கமே முக்கியம். அடுத்து ஒருநாள் உலகக் கோப்பை வருகிறது. சில நேரங்களில் தோல்வியும் நல்லது. நீங்கள் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. இளைஞர்களை நினைத்து பெருமையாக இருக்கிறது. வெற்றி தோல்வி விளையாட்டின் ஒரு அங்கம். நிச்சயமாக இதிலிருந்து கற்றுக் கொள்வோம்” எனக் கூறினார்.