எனது பெற்றோருக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க வேண்டும் என்ற எனது ஆசை, பல கடினமான சூழலைக் கடந்து இந்திய அணியில் தன்னை இடம்பிடிக்க செய்ததாக ரிங்கு சிங் மனம் திறந்துள்ளார்.
பும்ரா தலைமையிலான இளம் இந்திய அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் தொடங்குவதற்கு முன்னதாக ஜியோ சினிமா சார்பில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரிங்கு சிங், எனது பெற்றோருக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க வேண்டும் என்ற எனது ஆசை, பல கடினமான சூழலைக் கடந்து இந்திய அணியில் தன்னை இடம்பிடிக்க செய்ததாக மனம் திறந்துள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது: இந்திய அணியில் சேர்க்கப்படுவதற்காக நிறைய கடினமான காலங்களை கடந்து வந்துள்ளேன். பொருளாதார ரீதியில் ஆதரவு கிடைக்காமல் பெரும் சிரமத்துக்கு ஆளானேன். எனது மனதுக்குள் ஒரு விஷயம் மட்டும் அணையாமல் தீராத ஆசையாக எரிந்து கொண்டே இருந்தது. எனது குடும்பத்துக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க வேண்டும் என்ற எனது ஆசை என்னை இந்திய அணியில் இடம்பெற செய்தது. எனது தன்னம்பிக்கை என்னை வலிமையானவராக மாற்றி இந்தப் பயணத்தில் உதவியது.
இந்திய அணியில் நான் சேர்க்கப்பட்டது எனது குடும்பத்துக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்திய அணியில் நீ இடம் பெற வேண்டுமென்றால் உன்னால் எவ்வளவு கடினமாக உழைக்க முடியுமோ அந்த அளவுக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என எப்போதுமே எனது அம்மா கூறுவார். எனது குடும்பத்தினரின் கனவு இன்று நனவாகியுள்ளது. நான் அவர்களது கனவில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனது குடும்பம் பொருளாதார ரீதியில் கஷ்டப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர்களை ஏழ்மையிலிருந்து வெளியே கொண்டு வந்து அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க நினைக்கிறேன் என்றார்.